Wednesday, March 17, 2010

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டுவருகிறது ‐ உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் கே.பீ சரணடைந்தார்? பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார்?

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதை உறுதிப்படுத்தி இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் பாதுகாப்புப் பேரவைக்கு சமர்ப்பிக்க தயாரித்திருந்த அறிக்கையொன்றை பாதுகாப்புச் செயலாளர் திடீரென இடைநிறுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவரும் ஆயுத வியாபாரம் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் கிடைக்கும் இலாபத்தை மெக்சிக்கோவிலுள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு வருவது குறித்த சில சாட்சியங்களையும் முன்வைக்க அந்த அதிகாரி திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பில் உட்தரப்பு மோதல்களை எதிர்கொள்ள முடியாததால் மலேசியப் புலனாய்வுப் பிரிவினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முழுமையான இணக்கத்தின் அடிப்படையில் கே.பி. இலங்கையிடம் சரணடைந்ததாகக் கொழும்பில் முக்கிய மட்டங்களில் பேசப்படுகிறது.

கே.பி. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் வெளியில் தெரியும் நபராக இருந்த போதிலும் சர்வதேச வலையமைப்பை வேறொருவரே வழிநடத்தி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரின் நிலைப்பாடாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாகவும் தகவலொன்று கிடைத்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொட்டு அம்மான் சமாதான உடன்படிக்கைக் காலத்தில் எந்தப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவர் குறித்த குறிப்பிட்டுக்கூறக் கூடிய தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருக்கவில்லை என்பதால் அவரை சிக்கவைக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கிடையில் சில பிளவுகள் ஏற்பட்டிருப்பதன் காரணமாக பொட்டு அம்மான் அந்த அமைப்பின் தலைமைத்துவத்திற்கு போட்டியிடவில்லை எனவும் அவர் அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளன.

எனினும் இந்த தகவல்களை குளோபல் தமிழச் செய்திகளால் ஆதாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அவ்வாறு ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைத்தால் அவற்றை விரைவில் செய்தியாக இணையத்தில் பார்க்க முடியும்.

http://suthumaathukal.blogspot.com/

No comments:

Post a Comment